கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
அப்போது அவ்வழியாகச் சென்ற, சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஞானசம்பந்தம் என்பவரது மகன் சிவக்குமார்(54), விபத்து குறித்து ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்திருந்தார். அவர் திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விபத்தை நேரில் பார்த்த சிவக்குமார் விசாரணைக்குஆஜராகுமாறு, போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, சிவக்குமார் கோவை சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று காலை வந்தார். அவரிடம் விபத்து குறித்தும், விபத்து நேரிட்டபோது அந்தப் பகுதியில் வேறு யாராவது சந்தேகத்துக்குரிய நபர்கள் இருந்தனரா என்பது உள்ளிட்டவை குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர்.