உத்தராகண்ட் தொழிலாளர்கள் மீட்பு: மீட்புக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

By செய்திப்பிரிவு

சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்ட மீட்புக்குழுவினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில். “உத்தரகாசி சுரங்கப்பாதை சரிவில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 சவாலான நாட்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது நிம்மதியளிக்கிறது. மீட்புப் பணியில் அயராத முயற்சிகளை மேற்கொண்ட துணிச்சலான மீட்புக் குழுக்கள் மற்றும் எலிவளை சுரங்கத் தொழிலாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். துணிச்சலான 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வலிமையும் உறுதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டில் சில்க்யாரா - பர்கோட் இடையே அமைக்கப்படும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ம்தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்பதற்காக, அமெரிக்க தயாரிப்பான ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரத்தின் பிளேடு, கம்பிகளில் சிக்கி உடைந்து சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்டது. இதனால், அந்த இயந்திரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு மீட்புப் பணிகள் வெற்றிகரமாக இறுதிக் கட்டத்தை எட்டியது. இந்த சூழலில், 17 நாட்களுக்குப் பின், சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். ஒருவர் பின் ஒருவராக சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE