5 பேருக்கு மறுவாழ்வு அளித்த மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (19). வீரபாண்டி சவுராஷ்ரா கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். இதில், தலையில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். பரத்குமாரின் தந்தை தன்னுடைய மகன் உடல்உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தார். இதையடுத்து, பரத்குமாரின் இதயம், நுரையீரல்கள், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை எடுத்து அதனை, சென்னை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 5 நோயாளிகளுக்கு வழங்கி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

மூளைச்சாவு அடைந்த இவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையிலும் அவரது உடல்உறுப்புகள் மூலம் 5 பேர் மறுவாழ்வு பெற்றதை நினைத்து அவரது குடும்பத்தினர் ஆறுதல் அடைந்துனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE