''மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு சேலம் இளைஞரணி மாநாடு அடித்தளம் அமைக்கும்'': அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை 6 மாதத்துக்கு முன்பே தொடங்கிவிட்டோம். மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாடு அடித்தளம் அமைக்கும்" என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஓட்டலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை, 6 மாதங்களுக்கு முன்பே திமுக சார்பில் தொடங்கப்பட்டு விட்டது.

தமிழகம் முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மண்டல வாரியாக பயிற்சி பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 5 மண்டலங்களில் மிகப்பெரிய மாநாடுகளைப் போல, கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களுக்கு கூறப்பட்டது.

தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்கக்கூடிய அளவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். எங்களது அடுத்த முக்கியமான பணி, சேலத்தில் நடைபெறக்கூடிய மாநில இளைஞரணி மாநாட்டை, சிறப்பாக நடத்துவது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை தலைவர் கூட்டியதற்கான முக்கிய நோக்கமே இதுதான். திமுக மாநாடு நடக்கிறது என்றால், அதன் எழுச்சி தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு இருக்கும்.

அமைச்சர் உதயநிதி, இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, ஏராளமான இளைஞர்கள் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அவர் பயணிக்கும் ஊர்களில் இருந்து புதிய இளைஞர்கள் கட்சியை நோக்கி வருகின்றனர். திமுக அரசும் இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது. இந்த இளைய பட்டாளத்தை, கட்டுக்கோப்பாகவும், திராவிடக் கொள்கையில் பற்றுக்கொண்டவர்களாகவும் மாற்றுவதற்காகத்தான், இளைஞரணி மாநாட்டை நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

முதல்வர் இளைஞரணி செயலாளராக இருந்தபோது, கட்சியின் முதல் இளைஞரணி மாநில மாநாடு திருநெல்வேலியில் நடைபெற்றது. 2-வது மாநில மாநாடு வருகிற டிச.17ம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது. இது ஒருநாள் மாநாடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதயநிதி தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக நான் பல்வேறு பணிகளை செய்து வருகிறேன். மாநாடு நடைபெறும் நாளன்று, காலை 9 மணியளவில், கட்சியின் இரு வண்ணக் கொடியை கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., ஏற்றி வைக்கிறார்.

மாணவரணி செயலாளர் எழிலரசன் மாநாட்டைத் திடலைத் திறந்து வைக்கிறார். முக்கியப் பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். மாநாட்டில் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாலை 6 மணிக்கு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த இளைஞரணி மாநாடு, கட்சியின் வரலாற்றில் மட்டுமல்ல, தமிழக மற்றும் இந்திய வரலாற்றிலும் முக்கிய மாநாடாக அமையப்போகிறது. வரவிருக்கின்ற, மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு, சேலத்தில் நடைபெறவுளள்ள இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும் மாநாடாக அமையும். கிட்டத்தட்ட 5 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE