சென்னை: பயணிகள் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித்தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாது மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (நவ.27) முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில்களில் அலுவலக நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக, மழை காலம் தொடங்கி உள்ளதால், போக்குவரத்து நெரிசல் இன்றி விரைவாக பயணம் செய்ய மெட்ரோ ரயில்களில் மக்கள் அதிகளவில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
எனவே, நெரிசல் மிகு நேரம் அல்லாத மற்ற நேரங்களிலும் மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டு 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மேலும், மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள், மின் தூக்கி வசதி மற்றும் இணைப்பு வாகன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.