கமுதி அருகே கனமழை - 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் பாதிப்பு

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: கமுதி அருகே கனமழை காரணமாக 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே நீராவி, கிளாமரம், நீராவி கரிசல்குளம், கூலிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் மிளகாய் விவசாயம் நடக்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக கண்மாய், ஊருணிகள், தடுப்பணைகள் நிரம்பி வயல் களுக்குள் மழைநீர் புகுந்து விட்டது. இதனால் 100 ஏக்கரிலான மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், வயல்வெளியில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மிளகாய் செடிகள் அழுகிவிட்டதை காண்பிக்கும் விவசாயிகள்.

இதுகுறித்து அப்பகுதி விவ சாயிகள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக பருவமழை முறையாக பெய்யாததால், நெல், மிளகாய் விவசாயத்தில் பெரும் இழப்பை சந்தித்தோம். நடப்பாண்டில் அதிகப்படியான மழையால் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயம் செய்து வந்தோம். ஆனால், மிளகாய் செடிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டன. இதனால் கூடுதல் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்நிலையில், சாயல்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதால், கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனிடையே, மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் நேற்று வெளியேற்றப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE