மழை விடுமுறை அறிவிக்க பள்ளிகளுக்கு அதிகாரம் @ நெல்லை

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, நாகர்கோவில்: திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 3, மணிமுத்தாறு- 0.2, நம்பியாறு- 8, சேரன்மகாதேவி- 1.8, நாங்குநேரி- 2.6, களக்காடில் 3.2 மிமீ மழை பதிவானது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி நாங்குநேரி, ராதாபுரத்தில் தலா 10 மி.மீ., சேரன்மகாதேவியில் 1.6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 105.75 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 844 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 504 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 73.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 10 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. இதனிடையே திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பில், “ ஒருசில இடங்களில் அதிக மழை பெய்யலாம் என்று வானிலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, தங்கள் பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது. இது தொடர்பாக கல்வி அலுவலரிடம் தொலைபேசியில் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சிற்றாறு 1- 4, சிற்றாறு 2- 2.4, பேச்சிப்பாறை, மாம்பழத் துறையாறு- தலா 3, நாகர்கோவில்- 3.2, தக்கலை- 2.2, பாலமோர்- 5.2, குருந்தன் கோடு- 4, முள்ளங்கினாவிளை- 4.8, ஆனைக்கிடங்கில் 3 மிமீ மழை பதிவானது. மாவட்டத்தில் 54.12 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மாம்பழத்துறையாறு அணை நிரம்பியிருப்பதால் அணைக்கு வரும் 52 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

இதுபோல் 25 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட முக்கடல் அணை நிரம்பியிருக்கிறது. 48 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.02 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 611 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 301 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 77 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.46 அடியை எட்டியிருந்தது. அணைக்கு வி நாடிக்கு 586 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 400 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE