சென்னை: தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் நடந்த திமுக ஆட்சியில், தமிழக அமைச்சரவையில், தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தார். அமைச்சர் பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறையை கவனித்து வந்ததால், அவருடைய மகன் கவுதம சிகாமணி, மற்றும் அவரது உறவினர்கள் அந்தப் பகுதியில் செம்மண் எடுக்க 2007 பிப்ரவரியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்கான அனுமதி 2007 மே மாதத்தில், மிக குறுகிய காலக்கட்டத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது. செம்மண் குவாரியில் மண் அள்ள அனுமதிக்கப்பட்ட அளவை மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த பின்னணியில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜுலை 17ம் தேதி சோதனை நடத்தினர். 13 மணி நேர சோதனைக்குப் பிறகு, அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.41.9 கோடி மதிப்புள்ள வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.
மேலும், வெளிநாட்டு கரன்சிகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பறியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அன்றைய தினமே, அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் பொன்முடியின் மகனும், எம்.பி.யுமான கவுதம சிகாமணி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். இந்த விசாரணையின்போது, ஏற்கெனவே, அவரது வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
» ''த்ரிஷாவே என்னை மன்னித்துவிடு'' - மன்சூர் அலிகான் அறிக்கை
» சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா - புதிய வைரஸ் ஏதும் கண்டறியப்படவில்லை என விளக்கம்