எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றிய 100 பேருக்கு மாற்றுப் பணி

By செய்திப்பிரிவு

சென்னை: எண்ணூர் அனல் மின்நிலைய ஊழியர்கள் 100 பேருக்கு வடசென்னை அனல் மின்நிலையத்தில் மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: எண்ணூர் அனல் மின்நிலையத்தில் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு நிலைகளில் பதவிகள் ஒழிக்கப்பட்டன. இதையடுத்து அந்த பணிகளில் ஈடுபட்டிருந்த 400-க்கும் மேற்பட்டோருக்கு வடசென்னை பகிர்மான மண்டலத்தில் மாற்றுப்பணி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் வடசென்னை அனல்மின்நிலையத்தில் பணியாற்ற விரும்புவோரையும், தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்யும் வகையிலும் கண்டறியும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் அண்மையில் நேர்காணலும் செய்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ரீதியாகத் தகுதி பெற்ற 100 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்க மின்வாரியத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE