70-வது தேசிய கூட்டுறவு வார விழாக்களின் மூலம் 1.11 லட்சம் பேருக்கு ரூ.876 கோடி கடன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற 70-வது தேசிய கூட்டுறவு வார விழாவில் 1,11,027 பேருக்கு ரூ.876.84 கோடிக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை நாடு முழுவதும் தேசிய கூட்டுறவு வார விழா நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் முதல்வர் உத்தரவின்படி தமிழகத்தில், “ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் மற்றும் நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளில் கூட்டுறவு அமைப்புகளின் பங்கு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு 70-வது தேசிய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

கூட்டுறவுத் துறையின் மூலம், பயிர்கடன், நகைக் கடன், மகளிர்சுய உதவிக் குழு கடன், டாம்கோ,டாப்செட்கோ, தாட்கோ கடன், சிறுவணிகக் கடன், மகளிர் தொழில்முனைவோர் கடன், வீட்டுவசதி கடன், வீட்டு அடமானக் கடன், சம்பளக் கடன் என தொடர்ச்சியாக பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வந்தாலும், கூட்டுறவு வாரவிழா நடைபெறும் இந்த காலகட்டத்தில் 7 நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 1,11,027 பேருக்கு ரூ.876.84 கோடி கடனுதவிகள் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE