சேலத்தில் நமீதா பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக வழக்கு: கைதான இருவரின் ஜாமீன் மனு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை: சேலத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி கவுன்சில் என்ற அமைப்பின் தலைவரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், அதன்செயலாளரான பஞ்சாப்பை சேர்ந்ததுஷ்யந்த் யாதவ் என்பவரும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நடிகை நமீதா, தனது கணவருடன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அரசு சின்னம், தேசிய கொடி, பிரதமர் படம், எம்எஸ்எம்இ முத்திரை ஆகியவற்றை பயன்படுத்தி நிகழ்ச்சி நடத்தியதாகவும், இதன் மூலம் சிறு,குறு தொழில் முதலீட்டாளர்களிடம் வசூலித்த தொகையை திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறி கோபால்சாமி என்பவர் சூரமங்கலம் போலீஸில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார், முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோரை கைது செய்தனர். இருவரும் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் ஆஜராகி, மத்திய அரசின் கடன் திட்டங்கள் தொடர்பாக மாவட்டம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பணத்தை திருப்பி கொடுத்து விட்டதால் சமரசம் ஏற்பட்டுவிட்டது என்றார்.

போலீஸார் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், நிகழ்ச்சி நடத்திய அந்த அமைப்புக்கும், மத்திய,மாநில அரசுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் பிரதமரின் படம் மற்றும் அரசு சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தி முக்கிய பிரமுகர்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, மத்திய,மாநில அரசுகளின் அங்கீகாரம் பெறாத ஒரு அமைப்பு அரசு சின்னங்களைப் பயன்படுத்துவதும், பிரபலங்களை அழைத்து விழா நடத்தி, பதவி வழங்குவதாக பணம்வசூலிப்பதும், உயர் பதவி வகிப்பவர்கள் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதும் கண்டிக்கத்தக் கது எனக்கூறி ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE