ஆண்டிபட்டி: சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீகப் பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் இருந்து விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி வீதம் நேற்று முதல் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 67.50 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஏற்கெனவே மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீகப் பாசன 1,2 மற்றும் 3 பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் டிச.8-ம் தேதி வரை 3 கட்டங்களாக தண்ணீர் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சிவகங்கை, ராமநாதபுரம் வைகை பூர்வீகப் பகுதி 3-க்கு நேற்று முதல் விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி வீதம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
ஏற்கெனவே வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடியும் சேர்த்து மொத்தமாக 6 ஆயிரத்து 99 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதில் கால்வாய் வழியே 2 ஆயிரத்து 30 கனஅடி நீரும், ஆற்றின் வழியே 4 ஆயிரத்து 69 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்தைப் பொருத்தளவில் நேற்று முன்தினம் விநாடிக்கு ஆயிரத்து 690 கனஅடி நீர் இருந்தது. மழையால் நேற்று 2 ஆயிரத்து 477 கன அடியாக அதிகரித்தது
அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியாக உள்ளது. நீர்வரத்து 4 ஆயிரத்து 118 கன அடியாகவும், நீர்வெளியேற்றம் ஆயிரம் கன அடியாகவும் உள்ளது.