நவ.26-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதுதவிர, சேலத்தில் டிச.17-ம் தேதி திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இதை மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மாநாட்டை நடத்துவது குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக தலைமை கூட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், நவ.26-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தி.நகர், ஓட்டல் அக்கார்டில் நடைபெறும். திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் (பிஎல்சி) பணிகள் குறித்து விவாதிக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE