பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது: தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடல், குமரிக்கடலில் வளிமண்டல சுழற்சி பருவமழை மீண்டும் தீவிரமடைகிறது தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைவதால், தமிழகம், புதுச்சேரியில் வரும் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் இன்னும் பரவலான மழைப்பொழிவு இல்லை. ஆங்காங்கே ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவகாலத்தில் மழையை பெறும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில்தான் தற்போதும் மழை பெய்து வருகிறது.

கடந்த அக்.1 முதல் நவ.19-ம் தேதி வரையிலான வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் 29.8 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், 25 செ.மீ. மழைதான் பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 16 சதவீதம் குறைவு.

இதற்கிடையே, வங்கக்கடலில் உருவான மிதிலி புயலால், இந்த பருவத்துக்கு மாறாக, காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. வட மாவட்டங்களில் வானம் தெளிவாக உள்ளது. அவ்வப்போது வெயிலும் காணப்படுகிறது.

புயல் தற்போது கரையை கடந்துவிட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காலத்துக்கே உரித்தான வகையில் காற்று வீசத் தொடங்கியுள்ளது. வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும் காற்று வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (நவ.20) கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21, 22, 23, 24-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், வரும் 25-ம் தேதி ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வரும் 22-ம் தேதி திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வரும் 23-ம் தேதி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ. 19-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 11 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 9 செ.மீ., தங்கச்சிமடத்தில் 8 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியல், பேச்சிப்பாறையில் 6 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 5 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், வாலிநோக்கம், புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆகிய இடங்களில் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE