தமிழக மீனவர்கள் 22 பேர் படகுகளுடன் விடுவிப்பு: மத்திய நிதியமைச்சர் முயற்சியால் உடனடி நடவடிக்கை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்த சில மணி நேரங்களிலேயே, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட 22 மீனவர்கள், படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர், ராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 நாட்டுப் படகுகளில் 22 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நேற்று முன்தினம் இலங்கை கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்துக்கு வந்திருந்தார்.

ராமேசுவரம் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த அவரை, நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையிலான பாம்பன் மீனவர்கள் சந்தித்தனர். அப்போது, 22 நாட்டுப்படகு மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க, நிர்மலா சீதாராமன் முயற்சித்தார். இந்திய வெளியுறவுத் துறை மூலம் இலங்கை அரசிடம் பேசினார்.

சில மணி நேரங்களிலேயே...: இதன்படி, நல்லிணக்க அடிப்படையில், சிறைப்பிடிக்கப்பட்ட பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் 22 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவே விடுதலை செய்யப்பட்டனர். படகுகளும் விடுவிக்கப்பட்டன.

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதால், நாட்டுப்படகு மீனவக் குடும்பத்தினர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று காலை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களும் தங்களது படகுகளுடன் நேற்று நண்பகல் 12 மணியளவில் பாம்பன் கடற்கரையை வந்தடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE