அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு குறித்த அறிக்கையை தினமும் சமர்ப்பிக்க வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை; தமிழகத்தில் அரசு, உதவி பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம், அளவை உறுதி செய்ய ஏதுவாக தானியங்கி கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் சத்துணவு குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக அந்தந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமூகநலத்துறை ஆணையர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘சமீபத்தில் மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது பல்வேறு பள்ளிகளில் ஏஎம்எஸ் அமைப்பு மூலம் தினசரி சத்துணவு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் முறையாக மாவட்ட சமூக நலத்துறைக்கு அனுப்பாமல் உள்ளனர்’ என தெரிவித்துள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏஎம்எஸ் அமைப்பு மூலம் சத்துணவு அறிக்கையை குறுஞ்செய்தியாக தினமும் காலை 11 மணிக்குள் மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE