சென்னை: அமைச்சர் எ.வ.வேலு மனைவி நிர்வகிக்கும் அறக்கட்டளை, அரசு நிலத்தை ஆக்கிரமித்துதான் பொறியியல் கல்லூரி கட்டியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மாத்தூரில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா தலைவராக உள்ள திருவண்ணாமலை சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளை ஆகிரமித்து, பொறியியல் கல்லூரி கட்டியுள்ளது. ஆக்கிரமித்த நிலத்துக்கு பட்டா வாங்கி கல்லூரி தொடங்க அனுமதி பெற்றுள்ளனர். அரசியல் அதிகாரம் கொண்டவர் என்பதால் அரசு நிலத்தை வாங்கி அதில் கல்லூரி கட்டியுள்ளனர். எனவே, இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அளிக்கப்பட்ட மனு மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதால், கல்லூரி கட்ட வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டுமென கடந்த மாதம் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தேன். அந்த புகாரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபுர்வாலா , நீதிபதி பரத சக்கவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் உள்ளது என கேள்வி எழுப்பினர். பின்னர், அதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.