அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு 2-வது நாளாக சிகிச்சை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2-வது நாளாக நேற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பிறகு, கடந்த அக்டோபரில் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு, அவர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், நெஞ்சக பகுதியில் சில இடையூறுகள், கை, கால் மரத்துப்போகும் நிலை இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், கடந்த 15-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனைக்கு போலீஸார் ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர். மருத்துவ பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

2-வது நாளாக நேற்று இதயவியல், நெஞ்சகவியல், நுரையீரல், நரம்பியல் துறை மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் ஓரிரு நாள் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE