அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவிப் பேராசிரியர்கள் பணிநீக்கம்: உரிய கல்வித் தகுதி இல்லாததால் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில் பல்வேறு துறைகளில் தேவைக்கும் அதிகமாகபணி நியமனங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிர்வாகப் பிரச்சினையால் 2012-ல் பல்கலை.யில் நிதிச் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, அதே ஆண்டுஇறுதியில், பல்கலை. தனி அலுவலராக அரசின் முதன்மைச்செயலராக இருந்த சிவதாஸ்மீனா தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

அவர் அளித்த அறிக்கையின்படி, 2013-ல் தமிழகமுதல்வராக இருந்த ஜெயலலிதா, பல்கலைக் கழகத்தை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார். தொடர்ந்து, பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்ட சிவதாஸ்மீனா, மற்றொரு அறிக்கையை அரசுக்குச் சமர்ப்பித்தார்.

அதில், பல்கலை.யில் அதிக எண்ணிக்கையிலான பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளனர். அவர்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு பணி நிரவல் செய்தால், நிதிச் சிக்கல் தீரும் என்று தெரிவித் திருந்தார்.

இந்நிலையில், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தரின் கட்டுப்பாட்டுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, 2014 முதல் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலக உதவியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசுக் கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பணிநிரவல் செய்யப்பட்டனர்.

பின்னர், பல்கலை.யில் தணிக்கைக் குழு ஆய்வு மேற்கொண்ட போது, உரிய கல்வித்தகுதி இல்லாமல் பல்வேறு துறைகளில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக பல்கலை. சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உயர் கல்வித் துறைக்கு தகவல் தெரிவித்து, அதன் வழிகாட்டுதல்படி, மேலாண்மை (எம்பிஏ), பொருளாதாரம், வரலாறு, கணினி அறிவியல்ஆகிய துறைகளைச் சேர்ந்த56 உதவிப் பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து, பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு உத்தரவு அனுப்பியது.

இந்த 56 உதவிப் பேராசிரியர்களில் 38 பேர் பணி நிரவல்அடிப்படையில் பல்வேறு கல்லூரிகளில் பணியாற்றி வருகின்றனர். 18 உதவிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE