வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (நவ.15) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (நவ.16) காலை 5.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காலை 8.30 மணி அளவில் விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 390 கி.மீ கிழக்கு தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒடிசா) சுமார் 320 கி.மீ தெற்கு தென்கிழக்கே, டிகாவிலிருந்து (மே.வங்கம்) சுமார் 460 கி.மீ தெற்கு தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கி.மீ தெற்கு தென்மேற்கே நிலை கொண்டுள்ளது. இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்லா-கேப்புபாராவுக்கு இடையே கடக்கக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ.16) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE