பழங்குடியினர் தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரம்: நோட்டீஸ் அனுப்ப ஆளுநர் தமிழிசை உத்தரவு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பழங்குடியினர் தரையில் அமரவைக்கப்பட்ட விவகாரத்தில், விழா ஏற்பாட்டில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி ராஜ்நிவாஸ் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி கம்பன் கலை அரங்கத்தில் இன்று நடைபெற்ற பழங்குடியினர் பெருமை தின விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்ட பழங்குடியின மக்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் செய்யப்பட்டது. கூடுதலாக வந்த பழங்குடியின மக்களுக்கு உரிய இருக்கை வசதிகள் செய்து தரப்படவில்லை. அவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தனது அதிருப்தியை ஆளுநர் தமிழிசை வெளிப்படுத்தியுள்ளார்.

பழங்குடியின மக்களை கவுரவிக்கவும், புதுச்சேரி அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கவும், அவர்களைப் பாராட்டவும் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அவர்கள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதி செய்து தரப்படவில்லை என்பது கண்டனத்துக்குரியது‌. விழா ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்டுள்ள துறைத் தலைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE