வைகை அணையிலிருந்து 10 நாட்களுக்கு பாசனத்துக்காக நீர் திறப்பு: தமிழக அரசு

By செய்திப்பிரிவு

சென்னை: நாளை (நவ.15) முதல் 10 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: பெரியாறு பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதமும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 230 கன அடி வீதம் தண்ணீரின் இருப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்தினைப் பொறுத்து குடிநீருக்காக வைகை அணையிலிருந்து 10 நாட்களுக்கு 15.11.2023 முதல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகை அணை உபரி நீர் நிறுத்தம்: வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், பூங்காவில் உள்ள தரைப்பாலம், ஆண்டிபட்டி சாலையில் உள்ள பெரியபாலத்தை கடந்து செல்கிறது. பின்பு இந்த நீர் முதலக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள வைகைப்புதூர் எனும் இடத்தில் உள்ள பிக்அணையில் தேக்கப்படுகிறது. இதற்காக ஆற்றின் குறுக்கே இருகரைகளுக்கு இடையில் நீளமான தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

இங்கிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு கால்வாய் மூலமும், ஆற்றின் வழியாகவும் இருபகுதிகளாக தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது. இது தவிர, பிக்அப் அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு பல்வேறு குடிநீர் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததால் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 11-ம் தேதி நீர்மட்டம் 70.5அடியாக (மொத்த அடி 71அடி) உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக பாசனத்துக்காக விநாடிக்கு 900 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் மழை வெகுவாய் குறையத் தொடங்கியது. அதிகபட்ச அளவாக மஞ்சளாறு அணையில் 3மி.மீ., ஆண்டிபட்டியில் 2.6மி.மீ, பெரியகுளத்தில் 2.4 மி.மீ சோத்துப்பாறையில் 1 செ.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளது.

மழைமானி அமைக்கப்பட்ட 13 இடங்களில் இந்த 4 இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழை குறைந்ததாலும், பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 105 கனஅடி நீரே திறக்கப்படுவதாலும், வைகை அணைக்கான நீர்வரத்து வெகுவாய் குறைந்து வருகிறது. கடந்த வாரம் விநாடிக்கு 3ஆயிரம் கனஅடிநீர் வந்தநிலையில் படிப்படியாக குறைந்து 748 அடியாக மாறியது. நீர்வரத்து குறைந்ததால் கடந்த 4 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE