புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வேலைக்கு வந்த தோட்டக் கலை ஊழியர் ஓய்வறையில் நேற்று மயங்கி விழுந்துள்ள நிலையில், இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பெர்தீஸ் செலுத்ஸர் (56). இவர் வேளாண் துறை தோட்டக்கலை ஊழியர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் தோட்டக்கலைப் பணியாளராக பணியாற்றி வந்தார். அரசு விடுமுறை நாளான நேற்று ராஜ்நிவாஸுக்கு தோட்டப்பணிக்கு வந்துள்ளார். விடுமுறைநாள் என்பதால் குறைவானோர் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். உடல் நலம் குன்றிய பெர்தீஸ் செலுத்ஸர் ஓய்வறையில் மயங்கி விழுந்துள்ளார். இச்சூழலில் அவர் பணிமுடித்து வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் அழைத்துள்ளார். பதில் எதுவும் வராததால், ராஜ்நிவாஸ் சென்று விசாரித்துள்ளார். அங்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடியுள்ளார். உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்து விசாரித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள் ஓய்வறையில் பெர்தீஸ் செலுத்ஸர் இறந்து கிடந்ததை அறிந்து பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸார், பெர்தீஸ் செலுத்ஸரின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், "ஊழியர்கள் தகவல்படி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.