நவ.13 முதல் 15-ம் தேதி வரை மாலை, இரவு நேர சிறப்பு பேருந்துகளில் சொகுசு கட்டணம் வசூலிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் நவ.13 முதல் 15-ம் தேதிவரை மாலை, இரவு நேரங்களில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளில் சொகுசு கட்டணம் வசூலிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு நிர்வாக இயக்குநர் ஆல்பிஜான் வர்கீஸ் அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை கொண்டாடி விட்டு சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக வரும் 13 முதல் 15-ம் தேதி வரை மாலை மற்றும் இரவுப் பணியில் 60 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்படுகிறது. இந்த சிறப்பு பேருந்துகளில் சொகுசு கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பு பேருந்துகளை இயக்க ஓட்டுநர், நடத்துநர்களுக்கு சம்பந்தப்பட்ட கிளை மேலாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

அதன்படி, உரிய வழித்தடப் பெயர் பலகையை சரிவர பொருத்தி பயணச்சீட்டுகளை 100 சதவீதம் அதிகப்படுத்தி சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும். அனைத்து மண்டல மேலாளர்கள் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ``சிறப்பு பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் பேருந்துகளுக்கு சொகுசு கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறை. மேலும் இரவு பேருந்துகளில் இரட்டை கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், பயணிகளின் நலன் கருதி சொகுசு கட்டணம் வசூலிக்கப்படுகிறது'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE