தி.மலை கோயில் ராஜகோபுரம் எதிரில் வணிக வளாகம் கட்ட உயர் நீதிமன்றம் தடை

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கிழக்கு பகுதியில் உள்ள ராஜகோபுரத்துக்கு எதிரில் 6 கோடியே 40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, பொதுப் பணித்துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தை வாடகைதாரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். அவர்களிடம் இருந்த மீட்கப்பட்ட இடத்தில் கூடுதலான மாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் கோபுரம் மறைக்கப்படும் என பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

எனவே, இந்த கட்டிட பணிகளால், அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜ கோபுரத்தில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, கட்டிட பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது. கோயில்கள் மற்றும் புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில், டி. ரமேஷ், வழக்கறிஞர் ஜெகன்நாத், ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக அவசர முறையீடு செய்தனர்.

அப்போது அறநிலையத் துறை தரப்பில், "ராஜ கோபுரம் எதிரில் ஏறத்தாழ 6 கோடி ரூபாய் செலவில் வடகிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் 150 கடைகளை கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதனால் கோயிலின் ராஜகோபுரத்தை தரிசிப்பதோ, ராஜகோபுரத்தின் கட்டுமானமோ பாதிக்கப்படாது" என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோபுரத்தை மறைக்கும் வகையில் அறநிலையத் துறை மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து தடை உத்தரவு அமலுக்குவருகிறது. எனவே, எந்தவித கட்டுமான பணிகளிலும் மேற்கொள்ளக்கூடாது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE