மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 14,971 கனஅடியாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,971 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதி களில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக, காவிரியின் துணை நதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வறண்டு காணப்பட்ட பாலாறு, காவிரி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விநாடிக்கு 6,498 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணிக்கு 7,563 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை 8 மணியளவில் விநாடிக்கு 10,514 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலை 4 மணியளவில் 14,971 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 500 கனஅடியில் இருந்து 250 கனஅடியாக குறைக் கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அணை நீர்மட்டம் 56.42 அடியாகவும், நீர்இருப்பு 22.09 டிஎம்சியாகவும் உள்ளது.

அதேநேரத்தில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று முன் தினம் காலை விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE