சென்னை: விடுமுறை, விழா நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் பெரும்பொருளாதார சுமையாக இருப்பதாக வேதனை தெரிவிக்கும் மக்கள், கட்டணத்தை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறையின்போதும் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர் செல்வது வழக்கம். அரசுப் பேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காமல், பலரும் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடும் நிலையில், அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுகிறது.
இதுகுறித்து சென்னையில் வசிக்கும் மணிவாசன் என்பவர் கூறியதாவது: உற்றார் உறவினர் அனைவரும் ஒன்றுகூடுவார்கள் என்பதால், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு மட்டுமே சொந்த ஊருக்கு செல்கிறோம். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதால், விடுமுறை கிடைத்து ஊருக்கு போக திட்டமிடுவதற்கே போதிய காலம் தேவைப்படும். ரயில்களில் முன்பதிவு 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, சில நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது.
தூத்துக்குடி வரை உட்கார்ந்து பயணிப்பது சிரமம் என்பதால், படுக்கை வசதியுள்ள பேருந்துகளை நாடுகிறோம். அரசு பேருந்துகளில் முன்பதிவு சீக்கிரம் முடிந்துவிடுவதால், ஆம்னி பேருந்தை நாடுவோம். ஆனால், அவற்றின் கட்டணம் எப்போதும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது.
தற்போது குறைந்தபட்சமாக இருக்கைக்கு ரூ.1,200 வசூலிக்கப்பட்டது. மனைவி, குழந்தைகள் என குடும்பமாக செல்ல ரூ.4,500 செலவு செய்கிறோம். திரும்பிவருவதற்கு ரயிலில் தத்கால் முறையில் பயணச்சீட்டு கிடைக்காவிட்டால், மீண்டும் ரூ.5 ஆயிரம் அல்லதுஅதற்கு மேல் செலவழிக்க வேண்டும். பண்டிகையின்போது இது பெரும் பொருளாதார சுமையாக உள்ளது. ஆம்னி பேருந்துகள் அதிககட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆம்னி பேருந்துகளில் அதிககட்டணம் வசூலிப்பதற்கு அரசியல்கட்சி தலைவர்களும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தனியார் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.3,200, நெல்லைக்கு ரூ.3,400, கோவைக்கு ரூ.3,999 என, மக்களை கசக்கி பிழியும் வகையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது. கடந்த மாத தொடர் விடுமுறையின்போது, மொத்தம் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவற்றில் 2,092 பேருந்துகளுக்கு மட்டுமே ரூ.37 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை அரசு இனியும் அனுமதிக்க கூடாது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொண்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் கேட்டபோது, ‘‘சுற்றுலா பேருந்துபோல இயக்கப்படுவதால், ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் என்பது கிடையாது. உரிமையாளர்களே கட்டணத்தை நிர்ணயித்து, பேருந்துகளை இயக்கி வருகிறோம். சமீபத்தில் அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு, கட்டணத்தை மேலும் 5சதவீதம் குறைத்துள்ளோம். http://www.toboa.in மற்றும் http://www.aoboa.in ஆகிய இணையதளங்களில் ஆம்னி பேருந்து கட்டண பட்டியலை தெரிந்து கொள்ளலாம்’’ என்றனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பேருந்துகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பேருந்து நிலையங்களிலும் சோதனை நடத்துகிறோம். விதிமீறிய ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151 மற்றும் 044-24749002, 26280445, 26281611 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்’’ என்றனர்.