கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10% தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு 10 சதவீதம் தீபாவளி போனஸ் அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு லட்சம் போனஸ் தொகையாக வழங்கப்படவுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE