தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகின்றன. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இன்று (நவ.7) முதல் 10-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11, 12-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர்,கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை (நவ.8) கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று (நவ.6) காலை 8.30மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 12 செ.மீ. மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE