சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியா முழுவதும் அனைத்து மின் நுகர்வோரும் 2025 டிச.31-ம் தேதிக்குள் ‘ஸ்மார்ட் மீட்டர்’ எனப்படும் மின் மீட்டர்களைப் பொருத்த வேண்டுமென மத்திய அரசு நிர்பந்தப்படுத்தி வருகிறது. முன்பணம் செலுத்தி ரீசார்ஜ் கார்டுகளைப் பெற்று பணம் இருக்கும்வரை மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும், மணிக்கணக்கில் மின்சார நுகர்வைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும் ஏதுவான வகையில் ‘ஸ்மார்ட் மீட்டர்’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் மின்சார வாரியங்களுக்கு மூடு விழா நடத்தப்படும். மொத்தத்தில் தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். இதை வலியுறுத்தி, மக்களை திரட்டி அந்தந்த மின் வாரிய அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும்.