தீபாவளியையொட்டி பேருந்துகளில் பயணிக்க 82 ஆயிரம் பேர் முன்பதிவு

By செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிக்க 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது:

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவ.12-ம் தேதி (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. விரைவுப் பேருந்துகளை பொறுத்தவரை, 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.

அந்த வகையில், கடந்த மாதமே முன்பதிவு தொடங்கியது. அதன்படி, வரும் 9-ம் தேதி பயணிக்க 22 ஆயிரம் பேர், 10-ம்தேதி பயணிக்க 43 ஆயிரம் பேர், 11-ம் தேதி பயணிக்க 17 ஆயிரம் பேர் என மொத்தம் 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் இருந்து 10-ம் தேதி பயணிக்க 28 ஆயிரம் பேரும், பிற இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்க 15 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளது குறிப் பிடத்தக்கது.

இதேபோல, தீபாவளி பண்டிகை முடிந்து ஊர் திரும்பு வதற்காக 12-ம் தேதி பிற இடங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு 5 ஆயிரம் பேரும், 13-ம் தேதி 26 ஆயிரம் பேரும், 14-ம் தேதி 16 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். அரசு போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதவிர, பண்டிகை நெருங்கும்போது பேருந்து நிலையங்களில் தற்காலிக முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE