ஆயிரம் விளக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் கோபாலபுரத்தில் ரூ.1 கோடியில் கிரிக்கெட் மைதானம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆயிரம் விளக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1 கோடியே 9 லட்சத்தில் மாநகராட்சி சார்பில் கோபாலபுரம் விளையாட்டு திடலில் கிரிக்கெட் மைதானம் அமைய உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேனாம்பேட்டை மண்டலம், 111-வது வார்டில் கோபாலபுரம் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக இந்த மைதானத்தில் 3-ல் 2 பங்கு இடத்தில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட உள்ளது.

அதற்கான நிதியை ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ ந.எழிலன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியே 9 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அதற்கான பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குத்துச்சண்டை மையம்: இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி பெறும் வகையில், இந்த விளையாட்டு மைதானத்தில் 3-ல் ஒரு பங்கு பகுதியில் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த 2 பணிகளும் முடிவடையும் போது, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்சியையும், குத்துச்சண்டை விளையாட்டுப் பயிற்சியையும், இதர வகையான விளையாட்டுப் பயிற்சிகளையும் மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE