விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்பு தானம்: அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் @ திருச்செங்கோடு

By கி.பார்த்திபன்

நாமக்கல்: விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்செங்கோடு அருகே தோக்கவாடி குச்சிபாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் ஆசிரியை மஞ்சுளா. இவர் பள்ளிபாளையம் அருகே ஆலாம்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 3-ம் தேதி எஸ்பிபி காலனி வாய்க்கால் பாலம் பகுதியில் காலை பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது விபத்தில் சிக்கிய மஞ்சுளா மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி பெருந்துறை சானிடோரியம் அரசு மருத்துவமனையில் கண், சிறுநீரகம், இதயம், தோல் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதை செய்யப்படும் என உத்தரவு உள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து, அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE