மீன்வள துறை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு வேண்டும்: ‘எண்ணித் துணிக’ நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: மீன்வளத் துறைக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அதிலுள்ள வாய்ப்புகள் மற்றும் வளங்கள் குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுடன் ‘எண்ணித் துணிக’ எனும் தலைப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தி வருகிறார். அதன்படி ‘எண்ணித் துணிக’ 12-ம் கட்ட நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர், வேளாண் துறையில் சிறப்பாகச் செயலாற்றி வரும் தொழில் முனைவோர், விவசாயிகள் மற்றும்மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் மீன்வளம் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மீன்வளப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்குக்கூட அதுசார்ந்த புரிதல் இருப்பதில்லை. மீன்வளத் துறையில் உள்ள வாய்ப்புகள், வளங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

மீனவளத் துறையில் நமது மாநிலத்துக்கு அருகே உள்ள ஆந்திரா சிறப்பாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் தேவையான வளங்கள் இருந்தும் மீன்வளத் துறை பெரியளவில் முன்னேற்றம் அடையவில்லை. இந்த துறைக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. மீன்வளத் துறையில் நிபுணர்கள், தொழில் முனைவோர்களை நாம் உருவாக்க வேண்டும்.

15% உள்நாட்டு உற்பத்தி: வேளாண் துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 சதவீதமாக உள்ளது. எனினும், வளர்ச்சி என்பது உள்நாட்டு உற்பத்தியை அடிப்படையாகக் கொள்ளாமல் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே மையப்படுத்தும் வளர்ச்சி என்பது நல்லதல்ல. அதனால்தான் பிரதமர் நரேந்திர மோடி, மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையப்படுத்தாமல் மனிதவள வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறார். அதற்கேற்ப விவசாயிகளின் வருமானம் மேலும் உயர வேண்டும்.

அதேபோல், மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டிருக்க வேண்டும். ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது உணவுதான். அதை உற்பத்தி செய்பவன் ஏழையாக இருக்கிறான் என்பது கொடுமையானது. எனவே, விவசாயத்தைமேம்படுத்துவதில் நாம் கவனம் செலுத்தியாக வேண்டும். விவசாயிகளால்தான் உணவுக்காக மற்றவர்களிடம் கை ஏந்தும் நிலையில்லாமல் நாம் இருக்கிறோம். ஆனால், இன்று விவசாயிகளின் வாரிசுகள்கூட வேளாண் தொழில் செய்ய விரும்புவதில்லை.

கடந்த 20 ஆண்டுகளில் அதிகமான அளவில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. மனித உறவுகளுக்கான முக்கியத்துவத்தை மறந்ததால் குடும்ப கட்டமைப்பை இழந்து தவிக்கிறோம். தமிழகத்தின் விவசாயிகள் மற்றவர்களைவிட புத்திசாலிகளாக உள்ளனர். விவசாயம் பற்றிய இவர்களின் புரிதல்நாடு முழுவதற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். தமிழகத்தின் விவசாயத் தொழில்நுட்பத்தை மற்றவர்களும் அறிய வழிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விவசாயி குறுக்கீடு: ஆளுநர் ரவி பேசும்போது, திடீரென விவசாயி ஒருவர் குறுக்கிட்டு, ‘விவசாயம் மேம்பட நூறு நாள் வேலைத்திட்டத்தை தடை செய்ய வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்’ என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து பேசினார். அதை கேட்டுக்கொண்ட ஆளுநர் ரவி, ‘கண்டிப்பாக அதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

10,000 ஆராய்ச்சி கட்டுரைகள்: இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட வேளாண் உற்பத்தி பொருட்களை பார்வையிட்ட ஆளுநர் ரவி,வேளாண் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும், 10,000 ஆராய்ச்சி கட்டுரைகள் அடங்கியதமிழ்வழி வேளாண் கல்வி புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.

இந்நிகழ்வில் வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் தலைவர் முத்தமிழ் செல்வன், தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கருப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE