திண்டுக்கல் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்ததில் மின்னல் தாக்கி 1 பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று திண்டுக்கல், நத்தம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கன மழையால் திண்டுக்கல் நகரில் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

ரெட்டியார்சத்திரம் அருகே தாதன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் மனைவி விஜயலட்சுமி (27), நேற்று காலை மழை பெய்து கொண்டிருந்தபோது வீட்டின் முன் இருந்த வேப்பமரத்து அருகே வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த விஜயலட்சுமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நத்தம் அருகே கோட்டையூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வேல்முருகன் (35). நேற்று மாலை பலத்த மழை பெய்து கொண்டிருந்தபோது, மாட்டை பிடித்து வேறு இடத்தில் கட்டுவதற்காகச் சென்றார். அப்போது மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE