அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மீதான புகாரை மீண்டும் விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்த லோக் ஆயுக்தா உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், புகாரை மீண்டும் விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருட்கள் விநோயோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், திருவள்ளூரை சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தப் புகாரை நிராகரித்து லோக் ஆயுக்தா, 2022 மார்ச் 2ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், "அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருட்கள் தரமற்றவையாகவும், உயிரிழந்த பூச்சிகளுடனும் காணப்பட்டன. தரமற்ற பொருட்கள் வழங்கியதன் மூலம் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு புகார் அளித்ததேன். அந்த புகாரின் அடிப்படையில் தரமற்ற பொருட்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தரமற்ற பொருட்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றை தடுக்காத உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர்களுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்து லோக் ஆயுக்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த புகாரை மீண்டும் விசாரித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE