மாலத்தீவில் சிறை பிடிக்கப்பட்ட தருவைக்குளம் மீனவர்களின் விசைப்படகுக்கு ரூ.2.27 கோடி அபராதம்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: மாலத்தீவில் சிறை பிடிக்கப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுக்கு இந்திய மதிப்பில் ரூ.2.27 கோடி அபராதம் விதித்து மாலத்தீவு மீன்பிடி, கடல் வளங்கள் மற்றும் விவசாய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மீனவர்கள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி ஜெயபாலன் என்பவரது விசைப்படகில் 12 மீனவர்கள் கடந்த மாதம் 1-ம் தேதி ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றனர். அக்.22-ம் தேதி மாலத்தீவு எல்லை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த மலத்தீவு கடலோர காவல் படையினர்,

தவறுதலாக மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் கைது செய்து, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மாலத்தீவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது குறித்து தவகலறிந்த கனிமொழி எம்.பி., சிறை வைக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப் படகை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே, மாலத்தீவு மீன்பிடி, கடல் வளங்கள் மற்றும் விவசாய அமைச்சகத்தில் இருந்து விசைப்படகு உரிமையாளர் அந்தோணி ஜெய பாலனுக்கு அனுப்பிய நோட்டீஸில், மாலத்தீவின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்து, தடை செய்யப்பட்ட மீன் வகைகளை பிடித்ததாகவும், இது குறித்து பதிலளிக்குமாறும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

படகு உரிமையாளர் விளக்கம்: அந்தோணி ஜெயபாலன் கடந்த 29-ம் தேதி மாலத்தீவு சென்று அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அப்போது இந்தியாவைச் சேர்ந்த 2 தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அக்.19-ம் தேதி கடல் நீரோட்டம் காரணமாக படகு மாலத்தீவு கடல் எல்லை பகுதிக்குள் நுழைந்தது.

மாலத் தீவு கடல் பகுதியில் இருப்பதை உணர்ந்தவுடன், படகில் இருந்த மீனவர்கள் உடனடியாக வெளியேறுவதற்கு முயன்றனர். ஆனால், கடல் நீரோட்டம் காரணமாக படகு மீண்டும் மாலத்தீவு கடல் பகுதிக்குள் நுழைந்தது, என அந்தோணி ஜெயபாலன் விளக்க மளித்தார்.

மேலும், மீனவர்கள் வீசிய வலை விசைப்படகின் புரொப்பல்லரில் சிக்கியதால் மாலத்தீவு கடல் பகுதியில் இருந்து வெளியேற முடியவில்லை என்றும், புரொப்பல்லரில் இருந்து மீன் வலையை அவிழ்க்க 5 மணி நேரம் ஆனதாகவும், கப்பலில் உள்ள 10 மைல் நீளமுள்ள வலைகளை கைமுறையாக மீட்டெடுக்க மேலும் 10 மணி நேரம் பிடித்ததாகவும் அந்தோணி ஜெய பாலன் தெரிவித்துள்ளார்.

தங்களின் வயர்லெஸ் கருவி மூலம் 30 கி.மீ. சுற்றளவில் மட்டுமே தகவல்களை பரிமாற முடியும். வலையை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ​​தற்செயலாக சுமார் 40 சுறா மீன்களைப் பிடித்ததாக அவர் கூறியுள்ளார்.

ரூ.2.27 கோடி அபராதம்: ஆனால், மோசமான வானிலைக்கான ஆதாரம் இல்லை என்றும் விசைப்படகு மாலத்தீவு கடல் பகுதியில் அனுமதியின்றி மீன்பிடிக்க பிரவேசித்துள்ளதாகவும், படகில் செவுள் வலை மூலம் பிடிக்கப்பட்ட 10 டன் மீன்கள் இருந்ததாகவும் மாலத் தீவு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். .

விசாரணைக்குப் பின்னர், மாலத்தீவு கடல் எல்லை பகுதியில் அனுமதியின்றி நுழைந்து சுறாக்களை பிடித்ததற்காக 4.20 மில்லியன் ரூஃபியாவை ( இந்திய மதிப்பில் ரூ.2.27 கோடி ) அதிகாரிகள் கடந்த 1-ம் தேதி அபராதம் விதித்தனர். இந்த அறிவிப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்தோணி ஜெயபாலன் கூறும் போது, “நாங்கள் இப்போது ஆதரவற்ற நிலையில் இருக்கிறோம். மத்திய, மாநில அரசுகள் இந்தப் பிரச்சினையை பேசி தீர்த்து, விசைப் படகையும், மீனவர்களையும் பாதுகாப்பாக விடுவிப்பதை உறுதிசெய்யும் என்று நம்புகிறோம்,” என்றார்.

இதற்கிடையே, மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஓரிரு நாளில் போராட்டங்களை அறிவிக்க உள்ளாக தருவைக்குளம் பங்குத் தந்தை, ஊர் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE