நடிகர் ஜூனியர் பாலையா சென்னையில் காலமானார்: திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 70. அவரது உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3-வது மகன்ஜூனியர் பாலையா. இவர், ரகு பாலையா என்ற தனது பெயரை சினிமாவுக்காக ஜூனியர் பாலையா என்று மாற்றிக்கொண்டார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திரைப்படங்களில் நடித்து வந்தார்.கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சின்னத்தாயி, சங்கமம், வின்னர், சாட்டை,நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த ஜூனியர் பாலையா, உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை மூச்சுத் திணறல் காரணமாக காலமானார்.

அவருக்கு பார்வதி என்ற மனைவி, நடிகர் ரோஹித் என்ற மகன், நிவேதிகா என்ற மகள் உள்ளனர். ஜூனியர் பாலையாவின் உடலுக்கு திரையுலகினர், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு இன்று மாலை நடக்கிறது.

ஜூனியர் பாலையா மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: 280-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துமக்களின் பாராட்டையும், பேரன்பையும் பெற்றவர் ஜூனியர் பாலையா. அவரை இழந்து வாடும்குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: ஜூனியர் பாலையா ரகு, எனக்கு பதின்பருவ நண்பராக அமைந்தார். தந்தை போலவே நாடக மேடைகளில் தன் கலையை தொடங்கி திரையில் வலம் வந்தவர் மறைந்துவிட்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE