பொது இடத்தில் சாதிப் பெயரைக் கூறி தாக்கிய 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பொது இடத்தில் சாதிப் பெயரை குறிப்பிட்டு கணவன், மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி கண்மூடித்தனமாக தாக்கினர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்களை தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, சாதிப் பெயரைக் கூறி, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சாதிப் பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காவலர்கள் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE