தமிழக பாஜகவில் திருச்சி சூர்யா சிவாவுக்கு மீண்டும் பதவி: அண்ணாமலை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டிருந்த சூர்யா சிவா, அவர் வகித்து வந்த பதவியில் மீண்டும் தொடரலாம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூர்யா சிவா கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டதால், ஒழுங்கு நடவடிக்கை குழுவானது விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்ததன் அடிப்படையில் 24.11.2022 முதல் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்யப்பட்டிருந்தார். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க சூர்யா சிவா, தான் வகித்து வந்த பதவியில் மீண்டும் தெடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலைபேசியில் உரையாடினர். அப்போது இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதன்படி, திருப்பூர் பாஜக அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதன்பின்னர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா சிவா மற்றும் டெய்சி ஆகியோர், இனி சுமுகமாக தொடருவோம் என்று அறிவித்திருந்தனர். இதனையடுத்து, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்யா சிவா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாதத்துக்கு நீக்கப்படுவதாக கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி அண்ணாமலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE