தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற கோரிய வழக்கு தள்ளுபடி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், அரவிந்தாக்‌ஷன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ளதாக கூறி அக்கட்சியின் கொடிக் கம்பம் அகற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடிக் கம்பங்கள் நட இருப்பதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும். சட்ட வரம்புக்கு உட்பட்டு மட்டுமே அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

பாஜக கொடிக் கம்பங்களை நடுவதற்கு அனுமதி வழங்கினால், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதோடு, பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என்று அரசு எந்த ஒரு அறிவிப்பையும் பிறப்பிக்காதது ஆச்சரியம் அளிக்கிறது. இது தொடர்பாக உள்துறை செயலாளருக்கும் டிஜிபிக்கும் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி மனு அளித்தேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக பல்வேறு அரசியல் கட்சிகளையும் சேர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வெறும் அச்சத்தின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே விளம்பர பலகைகள் வைப்பது, கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். எந்த விவரங்களும் இல்லாத மனுவை ஏற்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE