சென்னை: நெல்லை மாவட்டத்தில் பட்டியலின் இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நெல்லை மாவட்டத்தில் பட்டியலின் இளைஞர்கள் மீது சாதி வெறியர்கள் நடத்தியுள்ள வெறித்தனமான தாக்குதலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நெல்லை மாநகரில் உள்ள மணிமூர்த்திபுரம் தாமரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 பேர் வழி மறித்து மிரட்டி, அவர்களின் உடமைகளை பறித்துக் கொண்டு, நிர்வாணமாக்கி, அவர்களின் மீது சிறுநீர் கழித்து, கொடூரமான முறையில் அவமானப்படுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவம் நாகரிக மனித சமூகம் ஏற்றுக் கொள்ள முடியாத மனித உரிமை அத்துமீறலாகும்.
இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருவது, பெரும் வருத்தம் அளிக்கிறது. இத்தகைய சம்பவங்கள் நடக்க விடாமல் தடுப்பதற்காக அரசியல் உறுதியோடும், சமூக அக்கறையோடும், உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு, உடனடியாக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்கபடியான தண்டனை வழங்கிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கி.வீரமணி கண்டிப்பு: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் கடந்த 30-ஆம் தேதி மாலை வேளையில் இரண்டு இளைஞர்கள் குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, அப்பகுதியில் மது அருந்தி, கஞ்சா போதையில் இருந்த கும்பல் ஒன்று இரண்டு இளைஞர்களையும் வழிமறித்துத் தாக்கியுள்ளனர். அத்தோடு அவர்களின் சாதியைக் கேட்டவுடன் ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிந்ததும் இரண்டு பேரையும் கொடூரமாக, கையில் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து இருப்பது அநாகரிகமானதும், கடும் கண்டனத்திற்குரியதும், வெட்கப்படத்தக்கதுமாகும்.
» தமிழக, புதுச்சேரி ஆளுநர் மாளிகைகள் நேர்மையாக செயல்படுவதாக தமிழிசை விளக்கம்
» சென்னையில் ரயில் நிலையங்களை ஒட்டி அணிவகுத்து நிற்கும் ஆட்டோக்களால் பொதுமக்களுக்கு சிரமம்
நாம் நாகரிக உலகில், சுதந்திர நாட்டில் தான் வாழ்கிறோமா? சாதி என்னும் கொடூர நோய் மக்களை எப்படி மனிதத்தன்மையற்றவர்களாக ஆக்குகிறது என்பதை உணர வேண்டாமா? கேட்பதற்கே காது கூசும் இந்த அருவெறுப்பான செயலில் ஈடுபட்டோர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது வரவேற்கத்தக்கதாகும். அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடர வேண்டும். எப்படியேனும் சாதி - மதப் பிரச்சினைகளை, கலவரங்களைத் தூண்டிவிட வேண்டும் என்று கருதுவோர் இதன் பின்னணியில் செயல்பட வாய்ப்புண்டு. அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் இத்தகைய பிரச்சினைகளைத் தூண்டுவதன் மூலம் தமிழ்நாடு திராவிட மாடல் அரசுக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி திட்டமிடப்பட்டு நடப்பதாகவே சந்தேகிக்க முடிகிறது.
சாதிப் பிரச்சினைகள் எங்கு நடந்தாலும், அதற்கு உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருவது பாராட்டத்தக்கது. அதே வேளையில் சரியான பரப்புரை, விழிப்புணர்வூட்டல் ஆகியவற்றைச் செய்து, சாதி நோயிலிருந்து மக்களை மீட்கவேண்டியதும் அவசர அவசியமாகும். அதற்கு அனைத்து முற்போக்கு இயக்கங்களும், சமூகநீதி உணர்வாளர்களும் ஓரணியில் திரண்டு செயலாற்ற வேண்டும்; அதற்கு அரசு இயந்திரத்தின் அங்கங்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். மதவாதம், சாதி வெறியிலிருந்து மக்களைக் காக்க அதுவே நெடுங்காலத் தீர்வாகும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நெல்லையில் பட்டியலின இளைஞர்களின் ஆடைகளைக் களைந்தும், அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை தாக்குதலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.