முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான ரூ.350 கோடி முறைகேடு புகார் மீது நடவடிக்கை என்ன? - லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பொது விநியோகத்திட்டத்தில் பருப்பு, எண்ணெய் கொள்முதல் மூலம் ரூ. 350 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது என்ன நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்துலஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விரிவான அறி்க்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளரான வா.புகழேந்தி சென்னைஉயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவிவகித்த காமராஜ் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்முதல் செய்ததில் ரூ. 350 கோடி அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது .உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும், என கோரியிருந்தார்.

விரிவான விசாரணை தொடக்கம்: இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, ‘‘இந்த மெகா முறைகேடு குறித்து கடந்த 2018-ம் ஆண்டே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவி்ல்லை. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு கடந்தாண்டு இதுதொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்பதால் இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்றார்.

லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில்,மனுதாரருடன் சேர்த்து 3 பேர் இதே புகாரை தெரிவித்துள்ளதாகவும், அந்த புகார்கள் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டு தற்போது விரிவான விசாரணைதொடங்கி உள்ளது. இதுதொடர்பாக . அதிகாரிகளிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. 31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டியுள்ளது, என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக மனுதாரர் அளித்துள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.15-க்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE