சாதி, இனம், நிறம் அடிப்படையில் பாகுபாடு கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

By கி.மகாராஜன் 


மதுரை: ‘சாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழகத்தில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற்றேன். என்னுடன் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில், நான் மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினராக இருப்பதால் எனக்கு பணி நியமன ஆணை வழங்க மறுத்துவிட்டனர்.

பணி நியமனம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும் பணி வழங்காததால் மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கிலும் எனக்கு பணி வழங்க உத்தரவிட்டதால் 2013ல் மணிமுத்தாறு பட்டாலியன் காவலராக நியமிக்கப்பட்டேன். பின்னர் எனக்கு 2007- 2008 ஆண்டில் தேர்வானவர்களுடன் சேர்த்து பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு கோரி மனு அளித்தேன். என் கோரிக்கையை நிராகரித்து கமாண்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி மூப்பு, பதவி உயர்வு, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "பணி மூப்பு என்பது நிரந்தர பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு தான் வழங்கப்படும். முன்தேதியிட்டு பணி மூப்பு கோர முடியாது" என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் அதிகாரிகள் சிறுபான்மையினரை சமூக விரோதிகளாக சித்தரித்து அவர்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சியை தடுக்கும் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக மனுதாரர் வழக்கறிஞர் கூறியதை புறக்கணிக்க முடியாது. மனுதாரரை போன்றவர்களின் வேதனையை போக்குவது நீதிமன்றத்தின் கடமை. மனிதர்களாக பிறக்கும் யாவருக்கும் தான் எந்த வாழ்க்கை பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை உண்டு. பெற்றோர்கள், பிறக்கும் இடம், இனம், நிறம், மொழி, சாதியை தேர்வு செய்து பிறக்க முடியாது. இங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் இல்லை. அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் அனைவருக்கும் சமூகத்திற்காக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும்.

சாதி, இனம், நிறம், பிறக்கும் இடம், கலச்சார அடையாளங்கள் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என மோசமான நடத்தை கொண்டவர்களை மட்டுமே தடுக்க வேண்டும். அப்படி எந்த தடையும் இல்லாத நிலையில் ஒருவருக்கு பணி மற்றும் பதவி உயர்வு வழங்குவதை தடுக்கக்கூடாது. பொறுப்பான குடிமகன்களாக இருப்பவர்களுக்கு தடை விதிக்காமல், தேசப்பணியில் தங்களின் பங்களிப்பை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்த 21வது நூற்றாண்டில் அனைவரின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். குறிப்பாக மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். இல்லாவிட்டால் மனுதாரர்களை போன்றவர்கள் பாதிக்கப்படுவர்.

மனுதாரர் 5 ஆண்டு தாமதமாக பணியில் சேர்ந்ததற்கு மனுதாரர் காரணம் அல்ல. அதிகாரிகள் தான் காரணம். எனவே, மனுதாரருக்கு 2007- 2008 ஆண்டிலிருந்து பணி மூப்பு வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 2007- 2008 ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுடன் பணிமூப்பு வழங்க வேண்டும். பணி மூப்பை 4 வாரத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE