முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: அதிமுக ஆட்சிக் காலத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு எதிரான புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்த மனுவில், ‘முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் காமராஜ். இவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொள்முதல் செய்ததில் 350 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்துள்ளதாக நான் அளித்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "பருப்பு எண்ணெய் போன்ற பொருட்கள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து 2018-ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. விரிவான விசாரணை நடந்து வருவதாக கடந்த 2022ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளித்தது. லஞ்ச ஒழிப்புத் துறை விதிகளின்படி ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் உடனடியாக விசாரணையை முடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், "மனுதாரருடன் சேர்த்து மூன்று பேர் இதே புகாரை தெரிவித்துள்ளனர். அந்த புகார்கள் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி தற்போது விரிவான விசாரணை துவங்கி உள்ளது.அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. 31 டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்து உண்மையான இழப்பை கண்டறிய வேண்டி இருக்கிறது. விசாரணை முடிவதற்கு முன்பு மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் அளித்த புகாரின் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE