மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குரு பூஜை நிறைவடைந்த நிலையில், தங்கக் கவசத்தை மீண்டும் வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஒப்படைத்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டும், 61 வது குரு பூஜை முன்னிட்டும், கடந்த 25ம் தேதி தங்கக் கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை அண்ணா நகர் வங்கி லாக்கரில் இருந்து எடுத்து அதை, தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக அந்த தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேவர் ஜெயந்தி விழா முடிந்ததையொட்டி பசும்பொனில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தங்கக் கவசம் மதுரைக்கு கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் காந்தி மீனாள் ஆகியோர் கையெழுத்துட்டு வங்கியில் மீண்டும் ஒப்படைத்தனர்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, ராமநாதபுரம் மாவட்ட கழக செயளாலர் எம்.ஏ.முனியசாமி, சட்டமன்ற உறுப்பினர் பெரிய புள்ளான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஆர். ராஜாங்கம், தமிழரசன், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல், வழக்கறிஞர்கள் கன்னித் தேவன், வழக்கறிஞர்கள் தமிழ் செல்வன், திருப்பரங்குன்றம் ஒன்றிய கழகச் செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.