சென்னை: தமிழகத்தில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ள சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
விஜயதசமி மற்றும் முக்கியத் தலைவர்களின் பிறந்த தினம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு அக்.22 மற்றும் அக்.29 ஆகிய 2 நாட்கள் தமிழகத்தில் வடமாவட்டங்களில் 33 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அக்.22 மற்றும் அக்.29 ஆகிய நாட்களில் 33 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல போலீஸார் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-க்கள் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். சீருடை அணிந்தவர்களை மட்டுமே அணிவகுப்பு ஊர்வலத்தில் அனுமதிக்க வேண்டும்;
போலீஸாரின் நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தீவிரமாக பின்பற்றி அமைதியான முறையில் செல்ல வேண்டும்; போலீஸார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்; அக்.22-ல் நடக்கும் அணிவகுப்பு ஊர்வலத்தின் வழித்தடத்தை அக்.20-ம் தேதிக்குள்ளாகவும், அக்.29-க்கான வழித்தடத்தை அக்.24-ம் தேதிக்குள்ளாகவும் போலீஸாரிடம் கொடுத்து அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "பண்டிகை காலங்கள் மற்றும் தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை சென்னை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை.
» தமிழகத்தில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்களுக்கு நவ.15 வரை கலந்தாய்வு
» விருதுநகர் மாவட்டத்தை பசுமையாக்க 4.25 லட்சம் விதை பந்துகள் தூவும் திட்டம் தொடக்கம்
மேலும், காவல் துறையின் உளவுப் பிரிவு தகவலின் அடிப்படையிலும் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு வங்கம், ஹரியாணா மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற பேரணிகளின்போது, மோதல் உருவாகி பல்வேறு சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே, இவற்றை கருத்தில்கொண்டும் உளவுத் துறை அளிக்க தகவலின் அடிப்படையிலும்தான் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. ஆனால், இதை கருத்தில் கொள்ளாமல், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி அனுமதி வழங்கினால்,அது சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்கும். எனவே, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது. இந்த மனு நவம்பர் 3-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.