மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை: தமிழகத்திடம் மத்திய அரசு உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரி முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வெளிவுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடக் கோரியும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகளைத் திரும்ப வழங்கிடக் கோரியும், இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை மத்திய அரசு விரைந்து காண வேண்டுமென்று வலியுறுத்தியும், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளிதரனுக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின்பேரில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு , ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ சங்கத்தைச் சார்ந்தஎன்.ஜே. போஸ், பி. சேசுராஜா, ஆர். சகாயம் ஆகியோருடன் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரனை இன்று (அக்.31) நேரில் சந்தித்து, முதல்வர் எழுதிய கடிதத்தினை வழங்கினார்.

முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த சில மாதங்களாக இதுபோன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 37 மீனவர்கள் IND-TN-10-MM-860, IND-TN-10-MM-985, IND-TN-10-MM-915, IND-TN-10-MM-717 மற்றும் IND-TN-10-MM-717 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 28.10.2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது, மேலும், அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நமது மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கு மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர். இந்தநிலையில், அவர்கள் இதுபோன்று அடிக்கடி கைது செய்யப்படுவது மீனவ சமூகத்தினரிடையே பெரும் துயரத்தையும், அச்ச உணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. 2023 அக்டோபர் மாதத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 64 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 10 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தொடர்ந்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவது தடையின்றி தொடர்வது வேதனையளிக்கிறது.

எனவே, இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், எவ்வித காலதாமமுமின்றி, உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சரை முதல்வர் அந்தக் கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தினைப் பெற்றுக் கொண்டு, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்த மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் , இதுகுறித்து முதல்வரின் கடிதம் ஏற்கெனவே தங்களது துறைக்கு வந்துவிட்டது. அதனடிப்படையில் உரிய நடவடிக்கை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை அதிகாரிகளுடன் இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE