பள்ளிக் கல்வி அமைச்சர் அலுவலகத்தை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முற்றுகை

By செய்திப்பிரிவு

திருச்சி: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்கள், திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2013-ல் நடைபெற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 40 ஆயிரம் பேர் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், டெட் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் பணி நியமனத் தேர்வு எழுத வேண்டும் என்று 2018-ல் அரசாணை வெளியிடப்பட்டது. இதனால், டெட் தேர்ச்சி பெற்ற 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியராகப் பணி நியமனம் செய்யப்படவில்லை.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மேல சிந்தாமணி வி.என்.நகரில் உள்ள பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியின் அலுவலகம் முன்பு, டெட் தேர்ச்சி பெற்று, பணிக்காக காத்திருக்கும் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2013-ல் டெட் எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு நியமனத் தேர்வு நடத்துவதை ரத்து செய்து விட்டு, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். தகவலறிந்து வந்த அமைச்சரின் உதவியாளர் சேகர் அருண் மற்றும் போலீஸார்,

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அக்.31-ம் தேதி (நாளை) சென்னைக்கு வருமாறு டெட் ஆசிரியர் சங்க முக்கிய நிர்வாகிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE