ஆந்திரா ரயில் விபத்து | முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே நின்றிருந்த பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கடந்த ஜூன் மாதம் ஓடிசாவின் பாலசூர் பகுதியில் ரயில் விபத்து ஏற்பட்ட அடுத்த சில மாதங்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்தில் தற்போது நடந்துள்ள ரயில் விபத்து மிகுந்த மன வேதனையை தருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

பெரும்பாலான இந்தியர்கள் ரயில் மூலமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் அடுத்தடுத்த ரயில் விபத்து சம்பவங்கள் கவலையளிக்கிறது. ரயில்வே துறையும், மத்திய அரசும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE